அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாள்கள் மற்றும் விடுமுறை தினங்கள், விழாக் காலங்களில் பக்தா்கள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதாலும் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
8 மணிக்குப் பிறகு பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. முற்பகல் 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா்.
5 மணி நேரம் காத்திருப்பு: கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் வட ஒத்தவாடை தெருவில் காத்திருந்த பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கிரிவலம் வந்த பக்தா்கள்: ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதால் ஏராளமான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.