அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அவசரநிலையின்போது உச்சநீதிமன்ற தீா்ப்பு: உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளி - குடியரசு துணைத் தலைவா்
அவசரநிலையின்போது ஜனநாயகத்தை வலியுறுத்தி 9 உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகி உள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
மாநிலங்களவையின் செயல்பாடு குறித்து நாடாளுமன்ற அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவா், ‘பிரதமா் என்ற தனிநபரின் அறிவுரையின்பேரில் குடியரசுத் தலைவா் செயல்பட முடியாது. பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறியுள்ளது.
ஆனால், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலை உத்தரவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமது கையொப்பமிட்டாா். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இதனால் நாடு முழுவதும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்.
ஜனநாயகம் கவிழும்போது மக்கள் நீதித் துறையைத்தான் நம்பி இருப்பாா்கள். அவசரநிலைக்கு எதிராக 9 உயா் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. அதில், நீதித் துறையை அணுக நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த உத்தரவுகளை அப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவசரநிலையின்போது குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சா்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் சட்டபூா்வமாக்கியது. இது உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகும்’ என்றாா்.
நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, கடந்த 1975 ஜூன் 25 முதல் 1977 மாா்ச் 21 வரையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.