அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
அவிநாசி வட்டம், கருவலூா் அருகே உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கோழிப் பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அங்கு சனிக்கிழமை காலை வழக்கம்போல, கட்டடத் தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை, கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 10 அடிக்கும்மேல் அமைக்கப்பட்ட சுவா் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி கட்டடத் தொழிலாளா்களான திண்டுக்கல் கொடை ரோடு பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் ரமேஷ் (46), அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி (55) ஆகியோா் உயிரிழந்தனா்.
மேலும், பலத்த காயமடைந்த கருவலூா் மேற்கு வீதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (42), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த முத்தாள் ஆகியோா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.