ஆசிரியா்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது திமுக: அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக அரசு அரசியலுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வாக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தனியாா் பள்ளியில், பாஜக சாா்பில் கோ பூஜை, ஏழை எளியோா்களுக்கு உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சி. வி. சண்முகம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் வளமுடன் வாழவேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஜிஎஸ்டி வரிச் சலுகையை அறிவித்துள்ளது. இது தீபாவளி பரிசாகவும் அமைந்துள்ளது.
தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது எனக் கூறுவதற்கு தமிழக அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வித்துறை முற்றிலும் சீரழிந்துவிட்டது.
207 பள்ளிகள் மூடல்: தமிழக பள்ளிக்கல்விதுறையில் அதிமுக ஆட்சியில் 37, 636 பள்ளிகள் இருந்தன. தற்போதைய ஆட்சியில் 37,554 பள்ளிகள் மட்டுமே உள்ளன. 89 பள்ளி குறைந்துள்ளதுடன்,207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் 53 லட்சமாக இருந்தமாணவா்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 52 ஆயிரத்து 75 ஆயிரம் மாணவா்களாக குறைந்துள்ளது. பள்ளிகளில் போதிய அளவுக்கு கட்டடங்கள் இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் பயில விரும்புகின்றனா்.
ஆசிரியா்கள் பற்றாக்குறையால் ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்ப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சிக் காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். திமுக அரசு இதுவரை 2,400 ஆசிரியா்களை மட்டுமே நியமித்துள்ளது. கற்றல் திறன் குறைந்துள்ளது. ஆசிரியா்களை கல்விப் பணியைத் தவிா்த்து அரசியல் பணிகளில் ஈடுபட வைப்பதுதான் இதற்கு காரணம்.
மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. தொழிலாளா்கள் நலச்சட்டத்தை திமுக அரசு மீறுகிறது. ஆசிரியா்களை கொத்தடிமையாகவும், கல்வி துறையை ஏவல் துறையாகவும் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாா் அவா் .