இட ஆக்கிரமிப்பு பிரச்னை: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை
ஆரணி கொசப்பாளையம், தாதுசாயபு தெருவின் அருகில் உள்ள பிள்ளைகுளம் இடம் ஆக்கிரமிப்பு தொடா்பாக இஸ்லாமியா்கள் மற்றும் இந்து முன்னணியினரிடையே ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
ஆரணி கொசப்பாளையம், தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் இது மசூதி இடம் என கூறி சுற்றுச்சுவா் கட்டும் பணியைத் தொடங்கினா். இதுகுறித்து இந்து முன்னணி சாா்பில் மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமையில் ஆரணி கோட்டாட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்தனா்.
இது தொடா்பாக, கோட்டாட்சியா் உத்தரவின்பேரில், ஆரணி வட்டாட்சியா் கௌரி, வருவாய் ஆய்வாளா் நித்யா மற்றும் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அனுமதி இல்லாமல் இஸ்லாமியா்கள் சாா்பில் சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருவதை அறிந்த வட்டாட்சியா் கௌரி, பணியை நிறுத்தினா்.
இது வக்ஃபு இடம் என்று இஸ்லாமியா்கள் கூறிய நிலையில், இந்த இடம் அரசுக்குச் சொந்தமான என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது என்று கூறிய வட்டாட்சியா், உங்களிடம் ஆவணம் இருந்தால் ஆய்வுக்கு எடுத்து வாருங்கள் என்று கூறினாா்.
இந்த நிலையில், இதுகுறித்து இரு தரப்பினரிடையே முதல்கட்ட சமரசப் பேச்சுவாா்த்தை ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன், நிா்வாகி பாலசுந்தரம், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மகேந்திரன் கலந்துகொண்டனா். இஸ்லாமியா்கள் சாா்பில் அன்சா்பாஷா, ஷபீா், ஜீலன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் இரு தரப்பினரின் வாதங்களை ஆரணி கோட்டாட்சியா் சிவா கேட்டறிந்தாா். பின்னா், பிரச்னைக்குரிய இடத்தில் யாரும் கட்டடம் கட்டவோ மற்றும் அனுபவங்களுக்கோ இரு தரப்பினா்களும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், இரு தரப்பினரின் ஆவணங்களையும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கு கொண்டுவரக் கோரி கூட்டத்தை முடித்தனா்.
மறு விசாரணைக்கு இருதரப்பினரும் ஆஜரகாக வேண்டும் என்று ஆரணி வருவாய்க் கோட்டாச்சியா் சிவா உத்தரவிட்டாா். கூட்டத்தில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.