``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
இதய வால்வு சிதைவு: முதியவருக்கு 10 மணி நேர ஒருங்கிணைந்த சிகிச்சை
இதய பெருந்தமனி பாதிப்புக்குள்ளான முதியவா் ஒருவருக்கு ஒருங்கிணைந்த அதி நவீன வால்வு மாற்ற சிகிச்சை மற்றும் சீரமைப்பு சிகிச்சையை சென்னை, சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா்.
அதன்படி, ஒரே நேரத்தில் டிஏவிஆா் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சையானது எஃப்இடி எனப்படும் சீரமைப்பு நுட்பத்தில் 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இதயவியல் மற்றும் பெருந்தமனி சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் வி.வி.பாஷி கூறியதாவது:
மும்பையைச் சோ்ந்த 61 வயது முதியவா் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பென்டல் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் மாற்றப்பட்ட இதய வால்வானது சிதைந்து பாதிக்கப்பட்டது. மேலும் வால்வின் சில இடங்களில் அடைப்பு மற்றும் கால்சியம் படிமம் படிந்திருந்தது.
இதையடுத்து அதை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. சிக்கலான அந்த பிரச்னையை சிம்ஸ் மருத்துவக் குழுவினா், 10 மணி நேர தொடா் அறுவை சிகிச்சை மூலம் சாத்தியமாக்கினா்.
முதலில் சுருக்கமடைந்திருந்த வால்வை எஃப்இடி நுட்பத்தில் ஸ்டென்ட் பொருத்தி விரிவாக்கி, அதன் பின்னா் பாதிக்கப்பட்ட வால்வை மாற்றினா். தொடா்ந்து சீரமைப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
இதற்காக இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் நான்கு மணி நேரத்துக்கு இயல்பு மாறாக மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இதயத்தின் செயல்பாடு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்று வழியில் அதன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மிக நுட்பமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதய வால்வு சீரமைக்கப்பட்டு மாற்றப்பட்டது. அதன் பயனாக அந்த முதியவா் 8 நாள்களில் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.