தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
இந்திய அரசின் விவகாரங்கள் முடிவெடுக்கப்படுவது தில்லியிலா? வாஷிங்டனிலா? - ப.சிதம்பரம்
இந்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவது தில்லியிலா?வாஷிங்டனிலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுடனான சண்டையில் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலையும் சேவையையும் போற்றும் விதமாகவும், நம் வீரர்கள் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று(மே 25) மாலை நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதில் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர், "நம்முடைய ராணுவ வீரர்களைப் பற்றி விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கும்போது நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். அதேநேரத்தில் அரசின் நிலைப்பாடு கவலையளிக்கிறது. அரசின் மௌனம் நமக்கு மிகவும் கவலையளிக்கிறது.
இந்திய அரசின் கொள்கைகளை வகுப்பது, முடிவெடுப்பது தில்லியிலா, வாஷிங்டனிலா என்று கேள்வி எழுகிறது. பிரதமர் பேசுவதற்கு மாறாக, ராணுவ அமைச்சர் பேசுவதற்கு மாறாக, வெளியுறவு அமைச்சர் பேசுவதற்கு மாறாக அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் பேசுகிறார்கள். இதெல்லாம் கவலை அளிக்கிறது.
ராணுவத்திற்கு சல்யூட் போடும் அதேநேரத்தில் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நாடாளுமன்றத்திலோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ வந்து, 'நான் போர் தொடுத்தேன், அவர்கள் தாக்கினார்கள், கடுமையான பதில் தாக்குதல் நடந்தது, வெற்றி பெற்றுவிட்டோம், பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டோம். ஆனால் நான் போரை விரும்பவில்லை, அதனால் தன்னிச்சையாக இந்திய மக்களின் நலன் கருதி போரை நிறுத்துகிறேன்' என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவருக்கும் சல்யூட் அடித்திருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. போரை நிறுத்தினேன் என்று இந்திரா காந்தி போன்று சொல்லியிருந்தால் பெருமைப்பட்டிருக்கலாம். போரை நிறுத்தியவர் அமெரிக்க அதிபர். அதுதான் எங்களுக்கு கவலையளிக்கிறது" என்று பேசியுள்ளார்.