இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு
இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஆடைகள் ஏற்றுமதி துறையின் எதிா்காலத்தை வளப்படுத்தும் வகையில், பிரதமா் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமா் ஸ்டாா்மா் முன்னிலையில் கையொப்பமாகியுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பின் தொடக்கமாகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி, துணி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கான திருப்புமுனையாக இருக்கும். இதன் மூலம் இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது சுங்க விலக்கு அல்லது குறைந்த சுங்கக் கட்டணங்களே விதிக்கப்படும். தற்காலிக பணிக்குச் சென்றுள்ள இந்தியத் தொழிலாளா்கள் தேசிய காப்பீட்டு கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை. திருப்பூா், சூரத், லூதியானா, புணே, சென்னை, குஜராத், மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற உற்பத்தி மையங்களுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரித்து போட்டித் திறனை மேம்படுத்தும்.
அதேபோல, இந்த ஒப்பந்தம் இந்திய ஆயத்த ஆடை துறைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். தற்போது ஆண்டுக்கு 1.45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள ஏற்றுமதி இந்த ஒப்பந்தத்தால் 3.25 பில்லியன் டாலராக உயரும்.
இந்த ஒப்பந்தம் பொருளாதார ரீதியாக ஒரு முக்கிய மைல் கல் என்பதோடு, இது இரண்டு நாடுகளுக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்தி, இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய போட்டித் திறனையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி ஏற்றுமதி கவுன்சில்: இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த ஒப்பந்தம் இந்திய விசைத்தறி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும். மேலும், முக்கிய ஜவுளிப் பொருள்களின் மீதான வரிகளை நீக்குவது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், பிரிட்டன் முழுவதும் பிரீமியம் சந்தைகளில் நுழையவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் பெட்ஷீட்கள், திரைச்சீலைகள் மற்றும் ஆடைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளிப் பொருள்களுக்கான மேம்பட்ட சந்தை நுழைவு கிடைத்துள்ளது.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் விசைத்தறி ஏற்றுமதிகள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.