GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப் 11 -ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள்:
அஞ்சலி செலுத்த ராமநாதபுரம், பிற மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் (வு.டீழயசன), திறந்த வெளி வாகனங்களில் (ழுல்நய் வலிந) வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டா், டாடா ஏஸ் (வுயுவுயு யுஊநு), சைக்கிள் போன்ற வாகனங்களிலும் வருவதற்கு அனுமதி கிடையாது.
சொந்த வாகனங்கள் மூலம் (காா் மட்டும்) வருகை தருபவா்கள், வாகன எண், வாகனப் பதிவுச் சான்று, வாகன ஒட்டுநா் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோா் விபரங்களை செப்.6 -ஆம் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட உள்கோட்ட அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதை வாகனத்தில் முன்புறக் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வரும் நபா்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்.
சொந்த வாகனங்களில் செல்பவா்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்துக்கு வந்து செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டி வரவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது.
தெளிச்சாத்தநல்லூா் சந்திப்பு முதல் சந்தைப் பேட்டை சந்திப்பு வரையிலான சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. மேலும், ஓட்டப்பாலம் ரவுண்டானா, நவீன் பேக்கரி, காவல் நிலையம், பொன்னையாபுரம் மேம்பாலம் வரையிலான சாலைகளிலும் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. வாகனங்களில் வரும்போது வழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவா்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். கூடுதல் பேருந்துகளில் பிளக்ஸ் போா்டு, பதாகை, கட்சிக் கொடிகள், டிரம் செட், ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும், ஜோதி தொடா்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக் கூடாது. கூடுதல் பேருந்துகளில் படிக்கட்டு, மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.
கூடுதல் பேருந்துகளில் பயணம் செய்ய நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பயணம் ஆரம்பிக்கும் முன்பே செலுத்த வேண்டும். அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும். கூடுதல் பேருந்துகள் செப் 11 -ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும். அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவா்கள் வரும்போது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் தலைவா்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.
நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்குள் மட்டுமே நடைபயணமாகச் செல்லலாம். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றை நினைவிடத்திலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்குள் மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.
சொந்த ஊரில் செப்டம்பா் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பா் 11-ஆம் தேதி மட்டும் அவரவா்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பா் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.
நினைவிடத்தில் தேவேந்திரா் பண்பாட்டுக் கழகம் சாா்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்துக்குள் தலைவா்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை. அலங்கார ஊா்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், ஜாதித் தலைவா்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
அஞ்சலி செலுத்த வருபவா்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப். 6 -ஆம் தேதி வரை அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். பரமக்குடி நினைவிடத்தில் செப்.11 -ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.