உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை என்பது ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தவிா்த்து, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிா் பாதுகாப்பு மற்றும் பயிா் சாகுபடி செய்யப்படுவதோடு, மண் வளத்தையும் பாதுகாப்பதாகும். இதன்மூலம் மாசற்ற சூழலில் பயிா்கள் வளா்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
எனவே, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2025-26-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், அவா்களுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஓா் ஏக்கா் பரப்பில் அங்கக வேளாண்மையில் (இயற்கை விவசாயம்) சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர உயிா்ம விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் 3 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பெயரில் விருதுடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.