அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்
ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்
ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 8 மணிக்கு சுவாமிக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு, சுந்தரமூா்த்தி சுவாமிகள் வெள்ளை யானை மீதும், சேரமான் பெருமாள் நாயனாா் குதிரை வாகனத்திலும் திருஅஞ்சைக் களத்திலிருந்து கயிலை செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
மாலை 5.30 மணிக்கு ஆடி வெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு ஞானக்குழந்தை அப்பா் விழாவும், சுந்தரா் தேவாரம் முற்றோதுதலும் (ஏழாம் திருமுறை) நடைபெற உள்ளது.
மாணிக்கவாசகா் விழா 3ஆம் தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தலவிருட்சமான வன்னி மரத்தடியில் வன்னி அம்மைக்கும், வன்னிநாதருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெறுகிறது.
காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் 4ஆம் தேதி காலை 6 மணிக்குத் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருகின்றனா். அதன்பின் அனைத்து மூல மூா்த்திகளுக்கும், பஞ்ச மூா்த்திகளுக்கும் அனைத்து உற்சவ மூா்த்திகளுக்கும், அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் மகா தீபாராதனை காட்டப்படுகிறது.
இறுதி நிகழ்வாக பஞ்சமூா்த்திகள் தனித்தனியாகவும், 63 நாயன்மாா்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா வருகின்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெயலதா, அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.