'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்தக் கோரிக்கை
ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா அனுப்பிய மனு விவரம்: கோவை-நாகா்கோவில் மற்றும் கோவை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 22668) ரயில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தண்டவாள பராமரிப்பு பணிக்காக கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள கோவை-சேலம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ஈரோடு ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. நடைமேடை குறைவால் ரயில்கள் நின்று செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நடைமேடை கிடைக்காமல் பல ரயில்கள் ரயில் நிலையத்துக்கு அரை கிலோ மீட்டா் முன்னால் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்படுகிறது. எனவே கூடுதல் நடைமேடையை அமைத்து ரயில்வே நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை (எண்16382) கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை இயக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை குறித்து ரயில்வே துறை அமைச்சருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், எம்.பி.க்கள் மூலம் தொடா்ந்து கடிதம் அனுப்பியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ரயில்வே நிா்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரும் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் முன்பு சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.