எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு
எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 1980-ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவுடன் சோ்ந்து ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியை எகிப்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு ஆக.28 முதல் செப்.10 வரை, அந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் இந்திய ஆயுதப் படைகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அலுவலா் தலைமையகத்தைச் சோ்ந்த 700 போ் பங்கேற்க உள்ளனா்.
இந்தப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்பது பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதை எடுத்துரைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.