"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.
கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய உமேஷ் யாதவ். தனது சர்வதேச கரியரில் மொத்தமாக 57 டெஸ்ட் போட்டிகளில் 170 விக்கெட்டுகளும், 75 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

குறிப்பாக, 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது, இந்திய அணியில் முதல் வீரர் உமேஷ் யாதவ்தான் (18 விக்கெட்டுகள்).
ஐ.பி.எல்-லில் 148 போட்டிகளில் 144 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல் எந்த அணியும் இவரை வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில், தனது கம்பேக் குறித்து உமேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய உமேஷ் யாதவ், "மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடைந்திருக்கின்றன.
இப்போதைய நிலையில் என்னை நானே தேர்வு செய்ய முடியாது. சில போட்டிகளில் நான் விளையாட வேண்டும், உடற்தகுதி பெற வேண்டும்.
நான் மீண்டும் வருவதற்குச் சவாலான கிரிக்கெட் ஆட வேண்டும். உடற்தகுதி பெற்று மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பதுதான் என்னுடைய முயற்சி." என்று கூறினார்.

மேலும், தனது கரியர் குறித்து பேசிய உமேஷ் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
இயல்பாகவே நான் வேகப்பந்து வீச்சாளர். சிறுவயதிலிருந்தே வேகமாகப் பந்துவீசி வருகிறேன். நான் எந்த அகாடமிக்கும் சென்றதில்லை.
அதனால்தான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் மகன் இங்கே இந்தியாவுக்காக விளையாடுகிறான். என்ன விஷயம் நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.