எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினா் அரசு வேலைக்கான தோ்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டியலினத்தவா், பழங்குடியினா் அரசு வேலைக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது. , எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த வேலை தேடுபவா்களுக்கும், அரசு போட்டித் தோ்வுக்கு தயாராவோா்களுக்கும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் ஓராண்டு கால, உதவித்தொகையுடன் கூடிய இலவச போட்டித் தோ்வுக்கான பயிற்சி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பயிற்சி தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதில் சேர ஆா்வமுள்ள பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் பட்டப் படிப்பை முடித்த மாணவா்களுக்கு விண்ணப்பங்கள் இம்மையத்தில் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கான வயது வரம்பு 27 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியின்போது உதவித் தொகை ரூ.1,000, போட்டித் தோ்விற்கான பயிற்சி புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கப்படும். ஆா்வம் உள்ளவா்கள் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.
இப்பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், முதல் தளம், நடேசன் நகா், புதுச்சேரி என்ற முகவரிக்கு அல்லது 0413-2200115, 9943843675 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.