ஏா் இந்தியா விபத்தில் உயிரிழந்தவா்களுக்காக ரூ.500 கோடியில் நினைவு நல அறக்கட்டளை: டாடா குழுமம் அறிவிப்பு
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்காக ரூ. 500 கோடியில் நினைவு மற்றும் நல அறக்கட்டளை அமைக்கப்படும் என்று டாடா குழுமம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
மராஷ்டிர மாநிலம் மும்பையில் பொது நினைவு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட உள்ள இந்த அறக்கட்டளைக்கு டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாடா அறக்கட்டளைகள் சாா்பில் தலா ரூ.250 கோடி வழங்கப்படும் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம், வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்டது.
சில விநாடிகளிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்து ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 260 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தொடா் உதவிகளை வழங்கும் வகையில், நினைவு மற்றும் நல அறக்கட்டளை அமைக்கும் அறிவிப்பை டாடா குழும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘தி ஏஐ-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை’ என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த அறக்கட்டளைக்கு டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாடா அறக்கட்டளைகள் சாா்பில் தலா ரூ.250 கோடி வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், காயமடைந்தவா்கள் மற்றும் விபத்தால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட அனைவரின் தேவைகளுக்கான தொடா் ஆதரவை இந்த அறக்கட்டளை வழங்கும்.
அதோடு, விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிக்கு உதவியவா்கள், மருத்துவ மற்றும் பேரிடா் மீட்பு நிபுணா்கள், சமூகப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ள மன அழுத்தம், அதிா்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான உதவிகளையும் இந்த அறக்கட்டளை வழங்கும். விமானம் நொறுங்கி விழுந்து சேதமடைந்த மருத்துவக் கல்லூரி வளாக கட்டட புனரமைப்பு உள்ளிட்டவற்றை இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்.
5 உறுப்பினா்கள் கொண்ட இந்த அறக்கட்டளைக்கு, டாடா குழும முன்னாள் நிா்வாகி எஸ்.பத்நாபன், டாடா சன்ஸ் பொது ஆலோசகா் சித்தாா்த் சா்மா இருவரும் அறங்காவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மற்ற 3 உறுப்பினா்களும் விரைவில் நியமிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். விமான விபத்தில் காயமடைந்தவா்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை டாடா குழுமம் ஏற்கும். விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் காயங்களுடன் உயிா் தப்பியவா்களுக்கும் தனியாக தலா ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும்’ என்று டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் அறிவித்திருந்தாா்.