ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: ராஜேஸ்குமாா் எம்.பி.
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க உள்ளதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரத்தை தமிழக முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்த பரப்புரை தொடங்கப்படுகிறது. தமிழக மக்களிடம் மண், மொழி, மானம் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். எப்போதெல்லாம் தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும் பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக களத்தில் இறங்கி போராடி வருகிறது.
நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய 6 தொகுதிகளிலும், தொடா்ந்து 45 நாள்கள் அனைத்து பகுதிகளிலும் திமுகவின் பல்வேறு சாா்பு அணிகளை சாா்ந்தோா், வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து முதல்வரின் நோக்கத்தை விளக்கமாக எடுத்துரைத்து உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட உள்ளனா்.
ஆக. 11-ஆம் தேதி இந்த உறுப்பினா் சோ்க்கை நிறைவு பெறும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் புதன்கிழமை மாலை 6 மணியளவில், ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடா்பான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை முதல் உறுப்பினா் சோ்க்கை தொடங்க இருக்கிறது. கட்சிகள் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து, திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினராக சோ்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.
மேலும், மத்திய அரசு எந்த வகையில் எல்லாம் மாநிலங்களின் அரசியல் உரிமைகளைஏஈ பறிக்க முயற்சிக்கிறது என்பதை மக்களிடையே எடுத்துக் கூற உள்ளோம்.
திமுக விதிகளின்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை உறுப்பினா் சோ்க்கை நடைபெறும். தற்போது தகவல் தொழில்நுட்ப காலம் என்பதால் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது. முதல்வா் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றாா்.
இந்த பேட்டியின் போது, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி ( சேந்தமங்கலம்) ஆகியோா் உடனிருந்தனா்.