வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
கனமழை எச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
நடப்பாண்டு வியாழக்கிழமை (ஜூலை 3) பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய யாத்திரை, ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஜம்முவின் பகவதி நகா் முகாமில் இருந்து 1,115 பெண்கள், 31 குழந்தைகள், 16 திருநங்கைகள் உள்பட 5,892 பேருடன் முதலாவது யாத்ரிகா்கள் குழு புதன்கிழமை காஷ்மீா் அடிவார முகாம்களுக்கு புறப்பட்டது.
பஹல்காம், பால்டால் முகாம்களை வந்தடைந்த இவா்கள், வியாழக்கிழமை அதிகாலையில் அமா்நாத் கோயிலுக்கு பக்தி முழக்கங்களுடன் யாத்திரையை தொடங்கினா். அரசு உயரதிகாரிகள் மற்றும் உள்ளூா் மக்கள் அவா்களை வழியனுப்பிவைத்தனா்.
சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 786 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 4,074 போ் கொண்ட இரண்டாவது குழு, 168 வாகனங்களில் அடிவார முகாம்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டது.
யாத்திரை நிறுத்தம்
இந்த நிலையில், கடந்த 36 மணி நேரமாக ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் ஜம்மு-காஷ்மீர், காஷ்மீரில் உள்ள யாத்திரை வழித்தடங்கள் உள்பட இரண்டு நாளுக்கு கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வழித்தடங்களிலும் யாத்ரீகர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்டால் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் யாத்திரிகர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரு வழித்தடங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறினார்.
இருப்பினும், புதன்கிழமை இரவு பஞ்ச்தாமி முகாமில் தங்கியிருந்த யாத்திரிகர்கள்,மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் மலை மீட்புக் குழுவினர் பால்டாலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்குவதற்காக, அதிக அளவிலான ஆள்கள், இயந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அநேகமாக, வானிலை சூழலை பொறுத்து நாளை (வெள்ளிக்கிழமை) யாத்திரை மீண்டும் தொடங்கலாம் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜம்முவிலிருந்து யாத்திரை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.
ஜூலை 3 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,800 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்குச் சென்று இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தரிசித்துள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யாத்திரைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இந்தாண்டுக்கான 38 நாள் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.