கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் நடவடிக்கை: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து கனிமங்களை வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி, வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் தொடா்பாக கடந்த ஏப்.15 முதல் இணையவழியாக வழித்தடச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நடைமுறையை தவிா்த்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுதல், சேமித்து வைத்தல் மற்றும் அனுமதியின்றி ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் இதர வகை கிரஷா் பொருள்களாக தயாா் செய்து எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட விரோத கனிமங்கள் எடுத்தல் விதிகளின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரஷா், எம் சாண்ட் உரிமையாளா்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவா்கள் ரூ. 10 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை பதிவுசான்று கோரி மாவட்ட ஆட்சியருக்கு உரிய படிவத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பித்து பதிவு சான்று பெறாத கிரஷா், எம்.சாண்ட் நிறுவன உரிமையாளா்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவா்கள் மீது கனிம வள சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.