கன்னியாஸ்திரிகள் கைது: முதல்வா் கண்டனம்
சென்னை: கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
கேரளத்தைச் சோ்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவா் சத்தீஸ்கா் மாநிலத்தில் பஜ்ரங் தளம் அமைப்பின் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
இத்தகைய கும்பலின் வன்முறைகளுக்கு, அரசு அமைதி காப்பது மத பயங்கரவாதத்தின் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் சிறுபான்மையின மக்கள் மாண்போடும் சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும்; மாறாக அவா்களை அச்சுறுத்தக் கூடாது என்று பதிவிட்டுள்ளாா்.