கபினியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: இரவு மேட்டூா் அணையை வந்தடையும்
கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் நீா்மட்டம் 61.58 அடியாக உள்ள நிலையில், புதன்கிழமை கபினியிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா் மட்டம் 115.78 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு 34,092 கனஅடி வீதம் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகா் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
கபினியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அணை நீா்மட்டம்:
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 113.81 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,829 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 83.94 டிஎம்சியாக உள்ளது.