``காங்கிரஸ் தான் தீவிரவாதத்திற்கு காரணம்; அப்சல் குருவை ஏன் தூக்கிலிடவில்லை?'' - அமித்ஷா கேள்வி
நேற்று மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,
பாகிஸ்தானை இந்தியா எப்படி வழிக்கு கொண்டு வந்தது?
"நாம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மற்றும் அதன் தளவாடங்கள் மீது தான் தாக்குதல் நடத்தினோம். ஆனால், அவர்கள் அவர்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்துக்கொண்டார்கள்.

அதனால், அதற்காக, அவர்கள் மே 8-ம் தேதி, நமது மக்கள் வசிப்பிடத்திலும், ராணுவ தளவாடங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
இதற்கு பதிலடியாக, மே 9-ம் தேதி, இந்தியா அவர்களது 11 ராணுவ தளவாடங்களையும், விமானத் தளங்களை அழித்தோம்.
இதன்பிறகு, பாகிஸ்தான் நம்மை தாக்கும் நிலையில் இல்லை.
சிதம்பரத்திற்கு கண்டனம்
சிதம்பரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பி என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.
அவர் மீண்டும், மீண்டும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளா என்று கேட்கிறார்.
நான் இன்று அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவர் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? பாகிஸ்தானையா, லஷ்கர்-இ-தொய்பாவையா அல்லது தீவிரவாதிகளையேவா?
இதை சொல்ல அவருக்கு வெக்கமாக இல்லையா? ஆண்டவன் புண்ணியத்தில், அவர் கேள்வி கேட்ட அன்றே, மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மோடிக்கு நன்றி!
ஆரம்பத்தில், நாம் இந்த மாதிரியான தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆவணங்களைத் தான் அனுப்பி கொண்டிருந்தோம். ஆனால், தற்போது விமான மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் மோடி பாகிஸ்தானுக்கு பதிலடியை தந்திருக்கிறார். அவர் பயத்தை உருவாக்கி இருக்கிறார்.
மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி. அவர் என்ன சொன்னாரோ, அது இப்போது நடந்திருக்கிறது. இன்று தீவிரவாதிகள் முகாம்கள், தீவிரவாதிகளின் தலைமையகம் ஆகியவை தூசியாக்கப்பட்டுள்ளது. நமது ராணுவப் படை அதன் தலைவர்களை அழித்துள்ளது.

காங்கிரஸ் மீது சாடல்
தீவிரவாதம் குறித்து கேள்வி கேட்க காங்கிரஸிற்கு எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி, சமாதான அரசியலால் தான் இன்று நாடு முழுவதும் தீவிரவாதம் பரவி உள்ளது.
பிரதமரை ராஜ்ய சபாவிற்கு வர சொல்கிறவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
பிரதமர் மோடி அலுவல் பணிகளில் இருக்கிறார். என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியும்போது, ஏன் அவரைக் கேட்கிறீர்கள்.
போர்நிறுத்தம்...
யார் போர்நிறுத்தத்தை கேட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அது யாருடைய கோரிக்கையின் பேரிலும் நடக்கவில்லை.
நாம் பாகிஸ்தானை அடிப்பணிய வைத்தோம். அவர்கள் தான் நமது ராணுவ இயக்குநர் ஜெனரலுக்கு போன் செய்து, தாக்குதலை நிறுத்த கேட்டுக்கொண்டார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே, போரோ, பாகிஸ்தானைத் தாக்குவதோ எங்களுக்கு எண்ணம் இல்லை.
'பாகிஸ்தானுக்கு தாக்குதலை நிறுத்த வேண்டுமானால், உடனடியாக நிறுத்திவிடுவோம்' என்று பிரதமர் மோடி உடனடியாக தெரிவித்துவிட்டார்.
சிதம்பரம்..
ஆபரேஷன் சிந்தூர் தீர்க்கமானது இல்லை என்று சிதம்பரம் கூறுகிறார். அவர் இங்கு இல்லையென்றாலும், அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.
1965 மற்றும் 1971 போர் தீர்க்கமானதா? அது உண்மையென்றால், ஏன் இன்னும் நாட்டில் தீவிரவாதம் இருக்கிறது.
எதிரிகள் பயப்படவோ அல்லது திருந்தவோ செய்யும் வரை, தீர்க்கமான முடிவு என்பது இருக்காது.
இத்தனை ஆண்டுகளாக, அவர்களைப் பயமுறுத்துவதுப்போல எதுவும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்புறம் ஏன் அவர்கள் பயப்படுவார்கள்.
எந்தவொரு இந்துவும் தீவிரவாதிகள் ஆகமாட்டார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன்.
சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தப் போது அப்சல் குரு தூக்கிலிடப்படவில்லை.
யார் இந்து தீவிரவாதம் குறித்து பேசுவது?

மதம்
மதத்தை வைத்து பெயர் வைப்பதை விட, இந்த அரசு ஒன்றும் செய்துவிட வில்லை என்று பிருத்விராஜ் சவான் கூறுகிறார்.
ஆனால், காங்கிரஸிற்கு, 'ஹர் ஹர் மஹாதேவ்' என்பது வெறும் மதம் ஸ்லோகம் அல்ல என்பது காங்கிரஸிற்கு புரியவில்லை.
அவர்கள் அனைத்தையும் இந்து - முஸ்லீம் என்றே பார்க்கிறார்கள்.
இன்றும்
இன்றும் பாகிஸ்தான் ஒரு சில தீவிரவாதத் தாக்குதலை இங்கு நடத்துகிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மோடியின் அரசு தீவிரவாத எதிர்ப்பிலும், தீவிரவாத ஊடுருவலை தடுப்பதிலும் தீர்க்கமாக இருக்கிறது" என்றார் அமித்ஷா.