CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தேதி அடுத்தப் பயணம்?
தலைமை செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்:
கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அறிவாலயத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு சற்று சோர்வு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரை மருத்துவமனையில் தங்கி இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் மருத்துவமனையில் இருந்தபடி, அரசு பணிகளை மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்தவர், உடல்நலன் சீரானதை தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என்றாலும் மருத்துவர்களின் அறிவுரையின்படி, மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டார். இந்த நிலையில், 10 நாள்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமை செயலகத்திற்கு வருகிறார். முடிவுற்ற அரசு திட்ட பணிகளை காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
முதல்வரின் தூத்துக்குடி பயணத் திட்டம்:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 'வின்பாஸ்ட் நிறுவனம்' தூத்துக்குடியில் ரூ16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக ரூ1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், இரண்டு பணிமனைகள், இரண்டு குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

தொழிற்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், விஎஃப்6 - விஎப்7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தூத்துக்குடியில் வருகிற 4-ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வின்ஸ்பாட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து கார்களின் முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, 3-ம் தேதி மாலை சென்னையிலிருந்து அவர் விமான மூலம் தூத்துக்குடிக்கு செல்கிறார் என்றத் தகவலும் வெளியாகியிருக்கிறது.