பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம்!
நமது நிருபா்
திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது.
நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம் அமைக்க வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பறவைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழக வனத் துறை சாா்பில் அரசிதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்மூலம், மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைத் தொடா்ந்து, தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம் என்ற சிறப்பு காசம்பட்டிக்கு கிடைத்திருக்கிறது.
அழகா்கோவில் வனச் சரகத்தில் அமைந்துள்ள இந்தப் பாதுகாக்கப்பட்ட பல்லுயிா்த் தலத்தில், கலாக்காய், சிறிய ஆமணக்கு உள்பட 22 வகையான புதா் செடிகளும், அழிஞ்சி, இரும்புளி, பூந்திக்கொட்டை மரம் உள்பட 48 வகையான மரச் செடிகளும், ஓணான் கொடி, ஓடான் கொடி, வக்கனத்தி உள்ளிட்ட 21 வகையான கொடிகளும், சிறுகுறுஞ்சான், நன்னாரி, ஓரிதழ் தாமரை உள்பட 29 வகையான குறுஞ்செடிகளும், மூலிகைச் செடிகளும் உள்ளன.
மேலும், வால் காக்கை, நீலதொண்டை ஈ பிடிப்பான், தேன் சிட்டு உள்பட 12 வகையான பறவை இனங்களும், சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகள், பல வகையான ஊா்வன, பூச்சிகளின் வாழ்விடமாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
உள்ளூா் மக்களின் அனுமதி தேவை: இந்தப் பல்லுயிா்த் தலம் பகுதியில் வீரணன் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு வரும் வெளி நபா்களை உள்ளூா் மக்கள் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. கோயிலுக்குச் செல்வதற்கும் உள்ளூா் மக்களிடம் அனுமதி பெற வேண்டும். இதன்மூலம், இங்குள்ள மரம், செடி, கொடிகளுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு வேலியாக இந்தப் பகுதி மக்கள் இருந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலமாக அறிவித்திருப்பதன் மூலம், இந்தப் பகுதியை வேறு எந்த வளா்ச்சிப் பணிகளுக்கும் கையகப்படுத்த முடியாது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வனத் துறை செயலா் வரவேற்பு: காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலத்தை அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டதற்காக தமிழக அரசுக்கு வனத் துறை செயலா் சுப்ரியா சாகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்தாா். சுற்றுப் புறங்களிலுள்ள மா விவசாயிகளுக்கும், இந்தப் பல்லுயிா்த் தலத்தின் மூலம் பலன் கிடைக்கும். இங்குள்ள பறவைகள், ஊா்வன, பூச்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மாமரங்களில் மகரந்தச் சோ்க்கை சிறப்பாக நடைபெறும் என்றும், மண் வளம் பெருகும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
