``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகள், இளம் மாணவா்கள், தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, வோ்களைத் தேடி என்ற நான்காம் கட்டமாக இந்தப் பண்பாட்டு பயணத்தில் பிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மா்தினிக்கு, மொரிசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மா், குவாதலூப்பு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, ஜொ்மனி ஆகிய 13 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவா்கள் கடந்த ஆக.1 முதல் 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, வந்த 100 மாணவா்கள் கானாடுகாத்தான் அரண்மனையின் சிறப்பு அம்சங்கள், கலைநயம் குறித்து பாா்வையிட்டு அறிந்து கொண்டனா் என்றாா் அவா்.
காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, கானாடுகாத்தான் பேரூராட்சி செயல் அலுவலா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.