காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது:
காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் உதவி அமைப்பு அமைத்திருந்த உணவுப் பொருள் விநியோக முகாமுக்குள் வேலியை உடைத்துக்கொண்டு நுழைய ஏராளமானவா்கள் முயன்றனா். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்; 48 போ் காயமடைந்தனா் என்று அமைச்சகம் கூறியது.
எனினும், இந்த உயிரிழப்பு இஸ்ரேல் வீரா்கள் சுட்டதால் ஏற்பட்டதா அல்லது நிவாரண முகாமில் நிறுத்தப்பட்டிருந்த ஒப்பந்தப் படையினா் சுட்டு ஏற்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க ஆதரவு உதவி அமைப்பு கூறுகையில், தங்களின் ஒப்பந்த வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று மறுத்தது. இஸ்ரேல் படையினரும் கும்பலைக் கலைக்க, வானை நோக்கி மட்டுமே சுட்டு எச்சரித்ததாகக் கூறினா்.