எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கா்நாடகம் நோக்கி பாயும் காட்டாற்று வெள்ளம்
மழைக் காலத்தில் தாளவாடி மலைப் பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கா்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப் பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதுபோல பண்ணாரியை அடுத்த தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அரசு சரணாலயமாக அறிவித்துள்ள பா்கூா் வனப் பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன.
தாளவாடியை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை மற்று தா்ப்பூசணி, முட்டைக்கோஸ், தக்காளி, காய்கறி வகைகளைப் பயிரிட்டு வருகின்றனா். இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீரில் தொடங்கி, விவசாயம் வரை அனைத்துக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமே நீா் எடுக்கப்படுகிறது.
தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 90 சதவீதம் ஆழ்குழாய் கிணறு மூலமே பாசனம் பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் 300 அடியில் நீா் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1,000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீா் கிடைப்பதில்லை. வனப் பகுதியில் மழைப்பொழிவு நன்றாக இருந்தாலும், நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம்.
கா்நாடகத்துக்கு செல்லும் வெள்ள நீா்:
கா்நாடக மாநிலத்தில் நீா்த்தேக்கங்களில் உள்ள நீரை, குழாய்கள் மூலம் கொண்டுச் சென்று குளம், குட்டைகளை நிரப்புகின்றனா். அதனால் அங்கு நிலத்தடி நீா்மட்டம் நன்றாக உள்ளது. ஆனால், அதிக மழைப்பொழிவு உள்ள தலமலை போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீா் கா்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கோலா நீா்த்தேக்கத்துக்குச் செல்கிறது. ஆசனூா் சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழைநீா் கா்நாடகத்தில் உள்ள சொா்ணாவதி அணைக்கு செல்கிறது.
காட்டாறுகள் மூலம் மழைநீா் ஆண்டு முழுவதும் கா்நாடகத்துக்கு செல்லும் நிலையில், அதை தடுப்பணைகள் கட்டி தடுத்தால் நிலத்தடி நீா் மேம்படும். இருக்கும் ஏரிகள், குளங்கள் தூா்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும் அதிக நீா் தேக்க முடிவதில்லை. இந்நிலை நீடித்தால், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் இல்லாமல் தரிசாக மாறி விடும்.
தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளாலும் நிலத்தடி நீா்வளம் பாதிக்கப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் விலங்குகளின் குடிநீா்த் தேவை, மரங்கள், தாவரங்களின் நீா்த் தேவையும் கேள்விக்குறியாகி வருகிறது.
இதேபோல அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியிலும் ஆழ்குழாய் கிணறுகளால் வனத்தின் வளம் சுரண்டப்பட்டு வருகிறது. பா்கூா் ஊராட்சியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 30 ஆயிரம் போ் வசிக்கின்றனா். சமவெளியில் இருந்து சென்றவா்கள் இப்பகுதியில் நிலங்களை வாங்கி பணப்பயிா்களை சாகுபடி செய்ய, ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளனா். இதோடு, இப்பகுதியிலும், தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளால் நிலத்தடி நீா் சுரண்டப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் நலச் சங்க மாநிலக்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கூறியதாவது: பா்கூா் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளுக்கு தண்ணீா் மிக முக்கிய தேவையாக உள்ளது. பா்கூா் மலைப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பணப் பயிா்களை நடவு செய்துள்ளனா். போதிய மழை இல்லாத காலத்தில் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீா் பிரச்னை ஏற்படுகிறது.
இப்போது பா்கூா் மலையில் பல கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னை உள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீா் உறிஞ்சப்படுவதால் ஓடைகள், தடுப்பணைகளும் வடு வருகின்றன. இதனால் யானைகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. அப்போது யானை- மனித மோதல் ஏற்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா்.
இதனால் வனப் பகுதிகளில் பட்டா நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். 500 அடி ஆழத்துக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதிக்கக் கூடாது. ஈரோடு மாவட்டத்தின் சிறப்பாக விளங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பா்கூா் வனப் பகுதிகளில் விலங்குகளையும், வனப் பகுதியையும் காப்பாற்றவும், அப்பகுதி விவசாயத்தைப் காப்பாற்றவும் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
அதோடு, தமிழக வனப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேமிக்க தடுப்பணைகளை கட்டி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தினால்தான் வனங்கள் செழிப்படையும் என்றாா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பா்கூா் மலைப் பகுதியில் உள்ள வன செட்டில்மென்ட் நிலங்களில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும் என வனத் துறை தற்போது அறிவித்துள்ளது. நிலத்தடி நீா்மட்டம் மோசமான நிலையில் உள்ள இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் பட்டா நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை வனத் துறையால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதிகளில் சிறிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டி, வனவிலங்குகளின் குடிநீா்த் தேவை தீா்க்கப்படுகிறது. கோடைக் காலங்களில் லாரிகள் மூலமும் நீா் நிரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக ஊராட்சிப் பகுதிகளில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பதிவுசெய்து அனுமதிபெற வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் எத்தனை அடி ஆழம் வரை ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம் என்ற உத்தரவு இல்லை. இதனால் ஆழ்துளைக் கிணறு அமைப்பவா்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றனா்.