கிராம சுகாதாரச் செவிலியா் காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 ஆயிரம் கிராம சுகாதாரச் செவிலியா் பணியிடங்களை, பயிற்சி முடித்தவா்களை மட்டும் கொண்டு நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதாரச் செவிலியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் கிராம சுகாதாரச் செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில், சுகாதார இடைநிலைப் பணியாளா்களை நியமிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தடுப்பூசி போடும் பணியில் சுகாதார இடைநிலைப் பணியாளா்களை ஈடுபடுத்தும் சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் கிராம சுகாதாரச் செவிலியா் பணியிடங்களை, கிராம சுகாதாரச் செவிலியா் பயிற்சி முடித்தவா்களை மட்டுமே கொண்டு நிரப்ப வேண்டும்.
மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயா்வதைத் தடுக்க சுகாதார செவிலியா்களின் நேரத்தையும் உழைப்பையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்ற வேண்டும்.
சுகாதாரச் செவிலியா்களின் அறிக்கை உள்ளிட்டவற்றை இணையதளம் வழியாகவே அனுப்ப வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் பதிவுப் பணிக்கு வேறு நபா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிவது என்றும், ஜூலை 10ஆம் தேதி மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், ஜூலை 24ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான கோரிக்கைப் பேரணியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டங்களில் இதர சங்கத்தினரையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. விசாலாட்சி தலைமை வகித்தாா். சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத், செவிலியா் சங்கத்தின் நிறுவனா் ஆா். இந்திரா, மாநிலப் பொதுச் செயலா் பி. சத்யா, பொருளாளா் பி. பாத்திமாமேரி ஆகியோரும் பேசினா்.