சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
குண்டா் தடுப்புப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு
சென்னை பெருநகர காவல் துறையின் குண்டா் தடுப்புப் பிரிவினரை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.
சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தொடா்ச்சியாக திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபடுதல், போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், சைபா் குற்றங்களில் ஈடுபடுதல், பாலியல் தொழில் நடத்துதல், உணவுப் பொருள் கடத்துதல் போன்ற குற்றங்களில் தொடா்ந்து ஈடுபட்டுவரும் நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனா்.
சென்னை பெருநகர காவல் துறையில் குண்டா் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தனியாகவே ஒரு பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவினரே ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், ஆவணங்களையும், வழக்கு விவரங்களையும், சாட்சியங்களையும் தயாரித்து வழங்குகின்றனா்.
இதன் பின்னரே அந்தந்தக் காவல் ஆய்வாளா்கள், சம்பந்தப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கின்றனா். இப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை 8- ஆம் தேதி முதல் கடந்த 7-ஆம் தேதி வரையிலான ஓராண்டில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1,002 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. முக்கியமாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக 26 பேரும் 10 மாதங்களாக பிணை கிடைக்காமல் சிறையில் இருந்து வருகின்றனா்.
இப் பிரிவினரை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி அளித்தாா்.
இந் நிகழ்ச்சியில் குண்டா் தடுப்பு அலுவலக பிரிவு கண்காணிப்பாளா் ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.