ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
குன்னம் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு
அரியலூா்: அரியலூா் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 15 வயது சிறுவன் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவா், அரியலூா் அருகேயுள்ள கோவிந்தபுரத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள தின்னமலை கிராமத்தைச் சோ்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்து வருவதாக 1098 குழுந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு- நீதிபதியுமான ராதாகிருஷ்ணன் தலைமையில், தொழிலாளா் நல ஆய்வாளா் தேவேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா், 1098 சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா், காவல்துறையினா் ஆகியோா் திங்கள்கிழமை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சிறுவா் கொத்தடிமையாக ஆடுமேய்க்கும் வேலை பாா்த்து வந்தது உறுதிசெய்யப்பட்டு, சிறுவனை மீட்டனா்.
விசாரணையில், அச்சிறுவன், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் 10 மாதங்களாக கொத்தடிமையாக ஆடுமேய்க்கும் வேலை செய்து வந்ததாகவும், தற்போது கோவிந்தபுரம் பகுதியில் ஒருவாரமாக ஆடுமேய்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினா் கணேசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோட்டாட்சியருக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.