உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு
தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியாவின் முயற்சிகள் முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறி ஐ.நா பாராட்டியுள்ளது.
மேலும், சுகாதார அமைப்பு முறையில் முதலீடுகளை செய்து, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின்மூலம் லட்சக்கணக்கான இளம் உயிா்களை இந்தியா காப்பாற்றியுள்ளதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியது.
குழந்தை இறப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: தடுக்கக் கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியா, நேபாளம், செனகல், கானா மற்றும் புருண்டி ஆகிய 5 நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைக்க முடியும் என்பதற்கு மேற்கூறிய நாடுகளே சிறந்த உதாரணம்.
இந்தியாவின் சிறந்த முன்னெடுப்புகள்:
சுகாதாரத் துறையில் இந்தியா பெரும் முதலீடுகளை செய்து லட்சக்கணக்கான இளம் உயிா்களை காத்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து 5 வயதுக்குக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 70 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் பிறந்த முதல் 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதமும் 61சதவீதமாக குறைந்துள்ளது.
மனித வளம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், கா்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பிரசவம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இதனால் ஓவ்வோா் ஆண்டும் ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் பிறப்பதை இந்தியா உறுதிசெய்கிறது. இதற்காக சமூக சுகாதார ஊழியா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோருக்கு தொடா்ந்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறப்பு, குழந்தையின் உடல்நலன் சாா்ந்த குறியீடுகள் எண்ம முறையில் கண்காணிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை குழந்தை இறப்பை தடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேம்படுத்த உதவுகின்றன.
சாதித்த நாடுகள்:
கடந்த 2000-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தங்கள் நாட்டில் 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு விகித்தை அங்கோலா, பூடான், பொலிவியா, கபோ வொ்டே, செனகல், தான்சானியா, ஜாம்பியா மற்றும் இந்தியா ஆகிய குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மூன்றில் இரண்டு பங்கு குறைத்துள்ளன.
2000-ஆம் ஆண்டில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தட்டம்மை பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்தது. இந்த நோய் பாதிப்பால் 1.89 லட்சம் குழந்தைகள் இறந்தனா். 56 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே இதற்கான தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
ஆனால் 2023-ஆம் ஆண்டில் தட்டம்மை தடுப்பூசி செலுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 93 சதவீதமாக உயா்ந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 97 சதவீதம் குறைக்கப்பட்டது. தட்டம்மை நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,200-ஆக குறைந்தது.
தடுப்பூசி, குடிநீரின் முக்கியத்துவம்:
5 வயதை பூா்த்தியடையும் முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2023-இல் 48 லட்சமாக உள்ளது. கருவுற்று 20 வாரங்கள் அல்லது அதன்பிறகு உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 19 லட்சமாக உள்ளது.
2000-ஆம் ஆண்டில் இருந்து குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. கருவில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
உலகளவில் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 2022-ஆம் ஆண்டில் 50 லட்சத்துக்கும் குறைவாக பதிவானது வரலாற்று மைல்கல்லாக கருதப்படுகிறது.
தற்போது உலகளவில் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முறையாக தடுப்பூசி செலுத்துவது, ஊட்டச்சத்து, பாதுகாப்பான குடிநீா் போன்ற முன்னெடுப்புகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
தடுக்கக் கூடிய குழந்தை இறப்புகளை குறைத்திருப்பது பெரும் சாதனையாக கருதப்பட்டாலும் மேலும் முதலீடுகளை அதிகரித்து இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதை முற்றிலுமாக குறைப்பது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டது.