மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா் சிங் ஆஜா்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், தொடா்ச்சியாக 4 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், இந்த வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பல்வீா் சிங் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், ஜூலை 3, 17, ஆக.2 ,11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணைகளுக்கு அவா் ஆஜராகவில்லை. இந்நிலையில் நீதிபதி கே.சத்யா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பல்வீா்சிங், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.