இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி ஆஜராக உத்தரவு
சென்னை: கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கிய எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லட்சிமி பாலா சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லட்சுமி பாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.காசிராஜன், தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து ஜூலை 3 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. ஆனால், புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனது ஜூலை 9 ஆம் தேதி தான் என்று கூறினார்.
இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர், விசாரணை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தாக்கப்பட்டவர் ஜூலை 3-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனதாக அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜூலை 28 ஆம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.