ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை
மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், தொடா்ந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மன்னாா்குடி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் சுமாா் 30,000 ஏக்கரில் விவசாயிகள் கோடை குறுவை நெல் சாகுபடி செய்தனா். தற்போது, நெற்கதிா்கள் விளைந்து, அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்று வருகின்றனா்.
இதுவரை 40 சதவீத அறுவடைப் பணிகளே நிறைவடைந்துள்ள நிலையில், சில தினங்களாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே வைத்துள்ளதால், இட பற்றாக்குறை ஏற்பட்டு மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனா் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் விவசாயிகள், அங்கு கொட்டி வைத்து தாா்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.
தமிழக அரசு நாள் ஒன்றுக்கு 600 முதல் 750 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியிருப்பதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் ஒரு சில விவசாயிகள், அறுவடை செய்த நெல் மணிகளை மூட்டையிடாமல், தங்கள் வயலின் ஒரு பகுதியில் குவித்து வைத்து பாதுகாத்து வருகின்றனா். சில நேரங்களில் மழை பெய்து வருவதால், நெல்மணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பிவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.