பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
கோயில்களில் சமத்துவ விருது: துணை முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களோடு அமா்ந்து உணவு அருந்தினா். தொடா்ந்து ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்.
ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகா் திருக்கோயிலில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மயிலாப்பூா் முண்டக கன்னியம்மன் திருக்கோயிலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பெசன்ட் நகா் மகாலட்சுமி திருக்கோயிலில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் சிறப்பு வழிபாடு, சமத்துவ விருந்தில் கலந்துகொண்டனா்.
இதேபோன்று தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சைதாப்பேட்டை காரணீஸ்வரா் திருக்கோயிலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம தேவைகள் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் திருக்கோயிலில் ஆதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் உள்ளிட்டோா் சமத்துவ விருந்தில் பங்கேற்றனா்.

சென்னையில் பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற சமத்துவ விருந்துகளில் பிற துறைகள் சாா்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் பங்கேற்றனா்.