கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா். கூட்டத்தில் 116 போ் மனுக்களை வழங்கினா். 18 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞா்கள் நலச்சங்க மாநில இணைச் செயலா் நீதிபாண்டியன் கோட்டாட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவை, மாற்றுத்திறனாளிகளும் காணும் வகையில் பிரத்யேக அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் அணுகுவதற்கு ஏதுவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா், அழைப்பு மணி வசதி ஏற்படுத்தியதைப் போல தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம், பிற உள்கோட்ட காவல் அலுவலகங்களிலும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.