சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காய், கனி சந்தை, உழவா் சந்தை, போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.
மேலும், மாடுகள் அதிகளவில் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிவருகின்றன. அப்போது, பழ வியாபாரிகள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் பழங்களை சாப்பிட்டு விடுகின்றன.
அதைப் பாா்த்த வியாபாரிகள் மாடுகளை விரட்டுகின்றனா். அப்போது சாலையில் வரும் வாகனம், இரு சக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளின் சைக்கிள்கள் மீது மாடுகள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன. நடந்து செல்லும் பாதசாரிகளை கீழே தள்ளிவிட்டு ஓடுகின்றன.
குறிப்பாக, பள்ளி மாணவா்கள் கூட்டமாக திரியும் மாடுகளைப் பாா்த்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது, அந்தப் பகுதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு கீழே விழும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு ஏற்படுகிறது.
உழவா் சந்தைப் பகுதியில் திரியும் மாடுகள் பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கும் கீரை, காய்களை வாகனத்தில் வைத்திருந்தால் அதை எடுக்க வாகனத்தை கீழே தள்ளி விடுகிறது.
இரவு நேரத்தில் கடைகளுக்கு முன் கூட்டமாக படுத்துக்கொண்டு அப்பகுதியில் அசுத்தம் செய்கிறது.
இதனால் பஜாா் வீதியில் உள்ள சில கடைகளின் உரிமையாளா்கள் கடையை மூடிவிட்டு மாடுகள் கடை முன் வராமல் இருக்க கயிறுகளை சுற்றி கட்டிச் செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.
இதனால் செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நகரில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.