கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அர...
"சிகிச்சையே வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்" - மருத்துவமனையில் நடந்ததை விவரிக்கும் கஞ்சா கருப்பு
நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற போது மருத்துவர்கள் பணியில் இல்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் தரப்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டது.
அதாவது மூன்று மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் ஒரு மருத்துவர் சற்று கால தாமதமாகப் பணிக்கு வந்ததால்தான் பிரச்னை. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது என அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.
இந்நிலையில் கஞ்சா கருப்புவிடமே நாம் என்ன நடந்தது எனக் கேட்டோம்.
''கொஞ்ச நாளாகவே அப்பப்ப கால் வலி படுத்தி எடுத்திட்டிருந்தது. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு நாம என்ன காசு பணம் நிறைய வச்சிருக்கோமா? அதனால போரூர்ல இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன்.
![கஞ்சா கருப்பு](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/c452b82b-6afb-4fbc-8d25-d5e4d7e115d7/95894_thumb.jpg)
ஆஸ்பத்திரின்னாலே எமர்ஜென்சிக்காகத்தான் வருவாங்க. அதனாலதான் 24 மணி நேரமும் அது இயங்கணும்னு சொல்றாங்க. அப்படியிருக்க வலியோட போனா அங்க என்ன ஏன்னு கேக்கக் கூட ஆள் இல்லை. ஒரு அம்மா வந்து 'அப்படி உட்காருங்க, வருவாங்க'னு சொல்லிட்டு அதுபாட்டுக்குப் போயிடுச்சு. நானும் செத்த நேரம் உட்கார்ந்திருந்தேன்.
ஆனாலும் குறுக்க நெடுக்க போறாங்க வர்றாங்களே தவிர, யாரும் வந்து பார்க்க மாட்டேங்குறாங்க. அதனால கடுப்பாகித்தான் 'நீங்க டாக்டர் நம்பர் கொடுங்க, நான் பேசறேன்'னு கேட்டேன். நம்பரும் தர முடியாதுன்னாங்க.
அதனால வேற வழியில்லாமத்தான் கத்த வேண்டியதாகிடுச்சு. நான் கத்தறதைப் பார்த்து என்னை மாதிரியே நொந்து போய் உட்கார்ந்திருந்த இன்னும் கொஞ்சம் பேர் கூடச் சேர்ந்து சத்தம் போட்டாங்க.
அதுக்குப் பிறகு யார் எங்க என்ன பேசினாங்கனு தெரியலை, ஒரு அம்மா வந்து, 'என்னங்க பிரச்னைனு வந்து கேட்டுச்சு. 'நான் தான் டாக்டர். உடம்புக்கு முடியலைனு சொல்லி லீவு போட்டிருந்தேன். இப்ப டூட்டிக்கு வரச் சொல்லிட்டாங்க. வாங்க என்ன பிரச்னைனு சொல்லுங்க'னு வேண்டா வெறுப்புடன் அவங்க கூப்பிட்ட தோரணையே சரியில்லை.
'வேண்டாம்மா, இதுக்கு மேல உங்ககிட்ட நான் ட்ரிட்மென்ட் எடுத்தா ஏதாச்சும் ஒரு ஊசியைப் போட்டு என்னைக் கொன்னு போட்டாலும் போடுவீங்க'னு சொல்லிட்டு சிகிச்சையே எடுக்காம திரும்பி வந்துட்டேன்.
எனக்கு என்ன ஆதங்கம்னா ஆஸ்பத்திரியில டாக்டர் இல்லை. நோயாளியா இருக்கற பல பேருடைய நிலைமையை யோசிச்சுப் பாருங்க. டாக்டர் இல்லைன்னு சொன்னா உடனே உடம்பு முடியாத ஒரு டாக்டருக்கு டூட்டி போடுறாங்களே, கொஞ்சமாச்சும் அறிவும் மக்கள் மேல அக்கறையும் இருக்கா பாருங்க?
கடந்த கால ஆட்சியில இருந்தப்பெல்லாம் இந்தத் தொல்லையெல்லாம் இல்லீங்க, இப்ப எல்லாம் தப்பு தப்பா நடக்குது. இந்த துறை அமைச்சர் என்ன செய்றார்னு கேட்டான். அதுல தப்பென்னங்க இருக்கு?" என ஆவேசமாக முடித்தார் கருப்பு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs