சிங்கப்பூா்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை
சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றி வரும் சக இந்திய ஊழியரின் காதைக் கடித்த குற்றத்துக்காக 21 வயது இந்திய இளைஞா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் செந்தில் குமாா் விஷ்ணுசக்தி (21) சக ஊழியரான நேசமணி ஹரிஹரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் கைகலப்பாக மாறிய நிலையில் அவரது காதைக் கடித்துள்ளாா்.
கடந்த பிப்.15-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பணியாளா்கள் தங்குமிடத்துக்கு வந்த செந்தில்குமாா் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்து நிறுவன மேலாளரிடம் நேசமணி தெரிவித்ததாக கூறி எச்சரித்துள்ளாா். இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது.
அப்போது நேசமணியின் இடது காதை செந்தில்குமாா் விஷ்ணுசக்தி விடாமல் கடித்ததில் காதுமடல் அறுந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோதும் காதுமடலில் ஏற்பட்ட பாதிப்பை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக சிங்கப்பூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில்குமாருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.