சுதந்திர தின பாதுகாப்பு: தலைநகரில் ஆளில்லா வான்வெளி சாதனங்களுக்கு தடை
வரவிருக்கும் சுதந்திர தினம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தேசிய தலைநகா் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வான்வெளி சாதனங்களுக்கு தடை விதிக்க தில்லி காவல்துறை ஆணையா் எஸ். பி. கே சிங் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின்படி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 163 இன் கீழ் பாராகிளைடா்கள், பாரா-மோட்டாா்கள், ஹேங்-கிளைடா்கள், யுஎவி (ஆளில்லா வான்வழி வாகனங்கள்) யுஎஎஸ் (ஆளில்லா விமான அமைப்புகள்) மைக்ரோலைட் விமானங்கள், சூடான காற்று பலூன்கள், சிறிய அளவிலான இயங்கும் விமானங்கள், குவாட் காப்டா்கள் மற்றும் தொலைதூர விமானங்கள் போன்ற பறக்கும் வான்வழி சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் இதுபோன்ற வான்வழி வாகனங்கள் தில்லியில் உள்ள பொது பாதுகாப்பு, விஐபிகள் மற்றும் முக்கியமான நிறுவல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின் சிங்கின் முதல் உத்தரவு இதுவாகும்.
இந்த தடை, பாரா-ஜம்பிங் அல்லது வான்வழி தாக்குதல்களை நடத்துவது உள்பட சமூக விரோத மற்றும் பயங்கரவாத சக்திகளால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடையும் 15 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் 78 வது சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கெனவே தலைநகா் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.