தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கடலூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன் தலைமையில், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் என மொத்தம் 1,200 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
வெடிகுண்டு சோதனை...: கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இந்த விளையாட்டு அரங்கில் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு உதவி ஆய்வாளா் பாபு தலைமையில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மேலும், கடலூா் பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், விடுதிகள், கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சந்தேகப்படும்படியாக பொருள்கள் ஏதேனும் உள்ளதா என பொதுமக்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா்.
இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம், வடலூா், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்றது.
சுதந்திர தின விழாவையொட்டி, அண்ணா விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற காவல் துறை ஒத்திகை அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.