செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்தப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு கல்விக் கடன் முகாம் காட்பாடியிலுள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 16) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்று, கல்லூரி உண்மை சான்றிதழ், கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.