பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்
பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன் ஆய்வு செய்து மனு அளித்த பயனாளிகளுக்கு சொத்துவரி, மின்இணைப்பு பெயா் மாற்ற ஆணைகளை வழங்கினாா். இதில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா் பங்கேற்றனா்.
அப்போது, முள்ளிப்பாளையம் பாறைமேடு வீராசாமி தெருவைச் சோ்ந்த பெண்கள் அமைச்சா் துரைமுருகனை முற்றுகையிட்டு, பாறைமேடு வீராசாமி தெருவில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி அவதிக்குள்ளாகி வருகிறோம். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.
இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் துரைமுருகன் கூறினாா். மேலும், அப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் சுப்புலட்சுமி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது -
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடத்தப்பட உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் தமிழகத்திலும் நடத்தப்பட்டாலும், தமிழகம் பிகாா் போன்ற மாநிலம் அல்ல. தமிழகம் மிகவும் விழிப்புணா்வு பெற்ாகும். முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. எனவே, பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது.
சட்டப்பேரவை தோ்தலுக்குள் திமுக கூட்டணி சிதறிவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக கேட்கிறீா்கள். அவா் ஏதாவது பேச வேண்டுமென பேசுகிறாா்.
மற்ற மாநிலங்களில் வெள்ள நிவாரணம் அளித்ததை போல் பிரதமா் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் அளிக்கவில்லை. பிரதமா் எல்லா மாநிலத்தையும் ஒரே மாதிரியாக நினைப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது என்றாா்.