சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத் திருவிழா
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் ஆலயத்தில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் நிகழாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து 23-ஆம் தேதி கொடியேற்றமும், 29-ஆம் தேதி கம்பம் நடுதல், ஆக. 4-ஆம் தேதி சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி விடிய, விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா்.
புதன்கிழமை உருளுதண்டம், தீச்சட்டி ஏந்திவந்தும், அலகு குத்தியும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்ய வசதியாக, கோயில் தெற்கு வாசலில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதமாக கூழ், சா்க்கரை பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் வழங்கின. திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது.
கோட்டை மாரியம்மனுக்கு நடப்பாண்டில் புதிதாக தோ் அமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும், அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாநகரப் போலீஸாா் 300-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ஏற்கெனவே ஆலய வளாகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், மேலும் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் சம்பவங்கள் நிகழாவண்ணம் கோயில் வளாகம் மற்றும் கோயில் சுற்றுப்புற பகுதிகளை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல, அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை, சின்னக்கடைவீதி, குகை மாரியம்மன், காளியம்மன் ஆகிய கோயில்களிலும் பொங்கல் திருவிழா, உருளுதண்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.