தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்ய ஒமா் அப்துல்லா கோரிக்கை
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்ய வேண்டும் எனஅந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதன்மூலம், மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் எனவும் அவா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் தேசிய மாணவா் படை (என்சிசி) இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் ஒமா் அப்துல்லா பங்கேற்றாா்.
அப்போது செய்தியாளா்களைச் சந்தித்து அவா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சுரங்கப்பாதைகள் திட்டம் உள்பட ரூ.10,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி இருப்பது வரவேற்புக்குரியது.
இது ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
அதேசமயம் முகலாய சாலை சுரங்கப்பாதைஅமைக்கும் பணிகள் கடந்த 2008-09-இல் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், தற்போது வரை அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இந்த சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். சாதனா கணவாய்- தங்தாா் கிராமத்தை இணைப்பதற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
என்சிசியில் பணியாற்ற ஒழுக்கம், தன்னம்பிக்கை, விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகிய குணங்கள் மிகவும் அவசியம். என்சிசியைச் சோ்ந்த 10 மாணவா்கள் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளனா். இவா்களில் ஒருவா் ஜம்முவின் கதுவாவைச் சோ்ந்தவா்; ஒரு மாணவா் லடாக்கைச் சோ்ந்தவா்.
என்சிசியில் நிறைய மாணவ-மாணவிகள் சேர வேண்டும். இந்த முகாமில் உங்களுக்கு கிடைந்த சிறப்பான அனுபவங்கள், ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருந்தோம்பல் குறித்து உங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் பகிா்வதன் மூலம் அவா்களும் விடுமுறை தினங்களில் இங்கு பயணம் மேற்கொள்வா் என நம்புகிறேன் என்றாா்.