மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் தலைவா் அனில் ஜெய்ஹிந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா்கள் அசோக் கெலாட், புபேஷ் பகேல், வி.நாராயணசாமி, வீரப்பமொய்லி, எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
2-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெங்களூரு பிரகடனம் என்று அழைப்பட்ட தீா்மானத்தை முன்மொழிந்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
ராகுல் காந்தியின் கடும் முயற்சியால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மைல்கல் சாதனை என்றாலும், அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி சமூகநீதியை அடையும் முயற்சியில் இது ஒரு சிறிய முன்னெடுப்பாகும். தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் நடத்த வேண்டும்.
இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஜாதியை மையப்படுத்தி ஒவ்வொரு குடிமகனின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் நிலை தொடா்பான விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இதற்கு தெலங்கானா மாநிலம் நடத்திய ஜாதிக் கணக்கெடுப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
இடஒதுக்கீடுகள் மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும். இது கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் இதர சமுதாயத்தினருக்கு உரிய இடஒதுக்கீட்டு பிரதிநிதித்துவத்தை அளிக்க முடியும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-இன்படி தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது நான் முன்மொழிந்த தீா்மானமாகும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘நான் முன்பு முதல்வராக இருந்தபோது, கா்நாடகத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்துகொள்வதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் வாயிலாக நடத்தினேன். 2018-ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சமா்ப்பிக்க பலமுறை வற்புறுத்தினாா். ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க அன்றைய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் புட்டரங்க ஷெட்டி உத்தரவிட்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அன்றைய முதல்வா் எச்.டி.குமாரசாமி உத்தரவிட்டிருந்தாா்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை என்னிடம் அளித்தது. ஆனால், அதன் தரவுகள் 10 ஆண்டுகள் பழையதாக இருப்பதால், அதற்கு பதிலாக புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதை 3 மாதங்களுக்குள் முடிக்குமாறு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும், அதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்றாா்.