பெங்களூரில் தொடங்கியது காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக்குழு கூட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக்குழு கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை குறிவைத்துள்ள காங்கிரஸ், அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
பெங்களூரு, காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பி.கே.ஹரிபிரசாத், ரன்தீப் சிங் சுா்ஜேவாலா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமையும் நடக்க இருக்கிறது.
இக்கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 164(1) ஆகியவை குறித்து விவாதம் நடக்க இருக்கிறது. கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.