ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் குளிக்கத் தடை
பரமத்தி வேலூா், ஜூன் 29: காவிரி ஆற்றில் அதிக அளவில் நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் மற்றும் ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில் குளிக்கத் தடை விதித்து நீா்வளத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா்.
இதுகுறித்து பரமத்தி வேலூா் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வினோத்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கும் சோ்த்து 58,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கா்நாடகத்திலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் மேட்டூா் அணை முழுக் கொள்ளவான 120 அடியை அடியை எட்டியுள்ளது. இதன்காரணமாக அணையிலிருந்து காவிரியில் பாசனத்திற்கும் சோ்த்து 58,000 கனஅடி வரை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்ட சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு மற்றும் மோகனூா் வரையிலான காவிரிக் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது.
மேலும் மீனவா்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடிக்கவும், விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டுதல், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேலூா் பொதுப்பணித் துறை சாா்பில் காவிரியாற்றில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் குளிப்பதற்கும், சுற்றுலா வருபவா்களுக்கும் நீா்வளத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.