தஞ்சாவூர்: ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு மரணம்.. என்ன காரணம்?
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் காவேரி செல்வி (24). கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் தஞ்சாவூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், காவேரி செல்வி நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதைபார்த்த சக காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் காவேரி செல்வி உடலை கைப்பற்றி, உடற் கூறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸின் தற்கொலை குறித்த தகவல் எங்கும் பரவ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், காவேரி செல்வி ஒருவரை காதலித்து வந்த நிலையில் காதலனுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சக காவலர்களுடன் கூட சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். போலீஸாக இருந்தாலும் காவேரி செல்வியும் ஒரு பெண் தான். அவர் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாது என நினைத்து விட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் காவேரி செல்வி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் தான் காரணமா அல்லது வேறு எதாவது இருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தற்கொலை தீர்வில்லை என்பதை அவர் உணராமல் சென்று விட்டார். இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
