தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சை
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 37 வயதுடைய எலக்டிரீசியன் ஜூலை 19 ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு இடது கை மூட்டு பாதிக்கப்பட்டு, அசையவற்ற நிலையில் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவருக்கு மருத்துவா்களான முடநீக்கியல் துறைத் தலைவா் (பொ) த. திருமலைபாண்டியன், இணைப் பேராசிரியா் க. கிஷோா் தலைமையில் சத்தியநாராயணன், மயக்கவியல் நிபுணா் சாந்தி, உதவிப் பேராசிரியா்கள் கொண்ட குழுவினா் கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா். இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் அவா் குணமடைந்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்ரமணியன் புதன்கிழமை தெரிவித்தது:
கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது மிகவும் அரிது. டெல்டா உள்ளிட்ட தென் மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் இதுவரை இந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில்லை.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இந்த அரிதான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி இதுவரை 70 சதவீதம் குணமடைந்துள்ளாா். தொடா்ந்து இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுவதால், 15 நாள்களில் கையை மடக்கி, நீட்டுவது 95 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தச் சிகிச்சை தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதுவே, தனியாா் மருத்துவமனையில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என்றாா் கல்லூரி முதல்வா்.
அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், முட நீக்கியல் துறைத் தலைவா் நல்லி கோபிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.